டெல்லி சுல்தான்கள்:
சுல்தான்களின் ஆட்சியில் – நிர்வாகத்துறை
கி.பி.1206 முதல் கி.பி 1526 வரையிலான 320 ஆண்டுகள் ஆண்ட டெல்லி சுல்தானிய ஆட்சியானது, மதவாத ஆட்சியாகவும், இராணுவ ஆட்சியாகவுமே இருந்தது. இஸ்லாமியச்சட்டங்களின் அடிப்படையிலேயே நிர்வாகம் நடைபெற்றது.
மைய நிர்வாகம்
சுல்தான், பேரரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். வாளளாவிய அதிகாரங்களை அவர் பெற்றிருந்தார். அவருக்கு உதவிட ஆறு அமைச்சர் களைக் கொண்ட குழு ஒன்று இருந்தது. நிர்வாக வசதிக்காகப் பல அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
சுல்தான்களின் அமைச்சர்கள்: |
|
வசீர் |
பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் |
திவானி ரிஸாலத் |
வெளியுறவு அமைச்சர் |
சுதர் உஸ் சாதர் |
இஸ்லாமிய சட்ட அமைச்சர் |
திவானி இன்ஷா |
அஞ்சல் துறை அமைச்சர் |
திவானி அர்ஸ் |
பாதுகாப்பு அமைச்சர் |
காஸி உல் கசாத் |
நீதித்துறை அமைச்சர் |
பேரரசு பல இக்தாக்களாகப் பிரிக்கப்பட்டன. அதனை நிர்வகித்தோர் இக்தார் என்றழைக்கப்பட்டனர். இக்தாக்கள் ஷிக், பர்கானா, கிராமங்கள் ஆகிய உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஷிக் பகுதியின் நிர்வாகி ஷிக்தார் என்றழைக்கப்பட்டார்.
பர்கானாவின் முக்கிய அலுவலர்கள் அமில் அல்லது முன்ஷிப் என்றழைக்கப்பட்டனர். மேலும் கருவூலர், கனுங்கோ ஆகியோர் நிர்வாகத்தில் இடம் பெற்றனர்.
உள்ளாட்சி நிர்வாகம் நிர்வாகத்தின் மிகச்சிறிய அளவு கிராமமாகும். கிராம நிர்வாகமானது மரபுவழி வந்த உள்ளூர் அலுவலர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. கல்வி, சுகாதாரம், நீதி, வரி ஆகிய பணிகளை இந்நிர்வாகம் கவனித்தது, பொதுவாக மையஅரசு உள்ளாட்சி நிர்வாகங்களில் தலையிடவில்லை.
வருவாய் நிர்வாகம்
நாட்டின் முதன்மையான வருமானம் நிலவரி மூலமாகவே கிடைத்தது. எனவே வேளாண்மைக்கும், பாசனத்திற்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வணிகவரி, வீட்டுவரி, சுரங்கவரி, குதிரைவரி போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டன.
நீதித்துறை
நீதித்துறையின் உயர்நிலைப் பொறுப்பு சுல்தானிடம் இருந்தது. தலைமை நீதிபதி காஸி-உத்-கவாத் எனப்பட்டார். ஒவ்வொரு நகரத்திலும் காஸி இருந்தார். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
படைத்துறை நிர்வாகம்
சுல்தான் அனைத்துப் படைப் பிரிவுகளுக்கும் தலைவர் ஆவார். அரச பரம்பரையினரைத் தலைவராகக் கொண்ட படைகள், ஆளுநர் தலைமை யிலான படைகள், உயர்குடிகளின் தலைமையிலான படைகள், போர்க் காலப்படைகள் ஆகிய படைப்பிரிவுகள் இருந்தன.
சமூகநிலை
வெளிநாட்டு முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோர் சமூகத்தில் வாழ்ந்தனர்.
பொருளாதார நிலை
வேளாண்மையே நாட்டின் முதன்மைத்தொழிலாக இருந்தது. அதற்கு அடுத்த நிலையில் நெசவுத்தொழில் இருந்தது. சர்க்கரை உற்பத்தி, காகிதம், முத்து எடுத்தல், தந்தம், சந்தனம் ஆகியவற்றைச் சார்ந்த தொழில்களும் நடைபெற்றன.
டெல்லி சுல்தான்களின் பங்களிப்பு கலை மற்றும் கட்டிடக்கலை
டெல்லி சுல்தானியர்கள் கலை மற்றும் கட்டிட கடையில் தனிச் சிறப்புடையவர்களாக இருந்தார்கள். கலைநுணுக்கங்களைக் கொண்ட அழகிய கட்டடங்களைச் சுல்தான்கள் கட்டினர். இவர்களது கட்டடக் கலை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை டெல்லி அல்லது பேரரசு கால பாணி, நகரக் கலைபாணி, இந்துக் கலைபாணி ஆகியனவாகும்.
குதுப்மினார், குவாத் உத் இஸ்லாம் மசூதி, நாசிர்-உத்-தீன் முகமதுவின் கல்லறை, பால்பனின் சமாதி ஆகியன மாம்லுக் கால அழகிய கட்டடங்களாகும்.
டெல்லியில் அமைந்துள்ள சீரி நகரம், ஹரத்நிஜாம்முதின் அலுயாவின் தர்கா, அலாய்தார்வாசா ஆகியவை கில்ஜி காலக்கட்டடக்கலைக்கு எடுத்துக் காட்டுகளாகும்
கியாசுதீன் துக்ளக்கின் கல்லறை, முகமது - பின் -துக்ளக் கட்டிய அதலாபாத் கோட்டை, துக்ளக்காபாத், ஜஹான்பனா ஆகிய நகரங்கள் துக்ளக் கால கட்டடங்களாகும். எனினும் இவ்வரசர்கள் கலைநயத்திற்குச் சிறப்பிடம் தரவில்லை. ஆனால் உறுதிமிக்க கட்டடங்களையே உருவாக்கினர். சில கட்டடங்கள் இந்து முறையிலும் அமைத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள லோடி பூங்கா, மோதி மசூதி மற்றும் சிக்கந்தர் லோடியின் கல்லறை ஆகியன லோடி மரபினர் காலத்தைச் சேர்ந்தவை.
இலக்கியம்
சுல்தான்களின் அவையில் அல்பரூனி, அமிர்குஸ்ரு ஜியா உல்பரணி போன்ற பல அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். பல சமஸ்கிருத நூல்கள் அராபிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. வட்டார மொழி இலக்கியங்கள் பெருமளவில் இக்காலத் தில் எழுதப்பட்டன. உருது மொழி உருவான காலமும் இதுவே.
சுல்தான்கள் கால அறிஞர்கள்
அல்பரூனி என்ற அறிஞர், அரபு, பாரசீக மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் பல்லாண்டு காலம் தங்கியிருந்த இவர், கஜினி முகமது அவையிலும் இடம் பெற்றிருந்தார். இவர் சமஸ்கிருத மொழியைக் கற்றதோடு, உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படித்து அதன் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். இவர் எழுதிய தாருக்கி-உல்-இந்த் என்ற நூலில் இந்திய சமூகப் பொருளாதார நிலையை விளக்கினார்.
சிறந்த பாரசீக மொழிக் கவிஞரான அமிர்குஸ்ரு சுமார் 4,00,000 ஈரடிச் செய்யுள்களை எழுதியுள்ளார். சிறந்த பாடகராக விளங்கிய இவர் 'இந்தியக் 'கிளி' எனப் புகழப்பட்டார். இவரது கவிதைகளில் நிறைய இந்திச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுல்தானியப் பேரரசின் வீழ்ச்சி
துக்ளக் மரபினரின் ஆட்சிக் காலத்திலேயே சுல்தானியப் பேரரசின் வீழ்ச்சியானது தொடங்கிவிட்டது எனலாம். மேலும் தைமூர் படையெடுப்பு, திறமையற்ற, சகிப்புத்தன்மையற்ற லோடி மற்றும் சையது மரபினர் சிலரின் நடவடிக்கைகளால் சுல்தானியப் பேரரசின் ஆட்சி வீழ்ச்சியுறத் தொடங்கியது.
வீழ்ச்சியின் தொடக்கமாக, விஜயநகரம், பாமினி அரசு, ஆகியன சுல்தான்களின் நிர்வாகத்திலிருந்து வெளியேறின. காண்டேஷ்,சிந்து, முல்தான் பகுதிகளில் இருந்த குஜராத், மாளவம், ஜான்பூர், காஷ்மீர், அஸ்ஸாம், ஒரிசா ஆகியன சுதந்திர நாடுகளாயின.
கி.பி 1526 இல் நடைபெற்ற முதல் பானிபட் போரில் இப்ராஹிம்லோடியை பாபர் வென்றதால் லோடி வம்சம் முடிவுக்கு வந்தது. இதனால் சுல்தான்களின் ஆட்சியும் முற்றுப்பெற்றது. டெல்லியைத் தலைநகராகக் கொண்டு, முகலாயப் பேரரசு உருவானது.
சுல்தான்களின் ஆட்சியில் – நிர்வாகத்துறை பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா?
இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல
முடியுமா? யோசிக்க வேண்டாம்.உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க Touch Here