Ads Area

மகாஜனபதங்கள் - இந்திய வரலாறு - TNPSC


பின் வேத காலம் வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசியலில் இருந்து ஒரு பிராந்திய அரசு என்ற மாற்றத்தை சந்தித்தது. 

கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த ஜன இனக்குழுக்கள் பல்வேறு பகுதிகளில் நிலையாக தங்க ஆரம்பித்தனர். 

மக்களின் ஆதரவு ஜனத்திடமிருந்து(இனக்குழு) ஜனபதத்திற்கு (பகுதி) மாற ஆரம்பித்தது.   

ஜனம் என்ற சொல்லுக்கு "இனக்குழு தன் காலை பதித்த இடம்"  என்று பொருள்.   

ஜனபதங்கள் வளங்களுக்காகவும் அரசியல் மேலாதிக்கத்திற்காகவும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டன.  

சில ஜனபதங்கள் தமது பகுதிகளை விரிவுபடுத்தி பல்வேறு ஜனங்களை தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தன.இப்படிப்பட்ட ஜனபதங்கள் மகாஜனபதங்களாக வளர்ச்சி பெற்றன.

ஒரு நாட்டிற்கு நிலம், மக்கள், அரசாங்கம், இறையாண்மை ஆகியவை முக்கிய கூறுகள் ஆகும்.  இவ்வனைத்து கூறுகளும் சில மகாஜனபதங்களில் காணப்பட்டன. மகாஜனபதங்கள் மக்களை ஆண்ட பிரதேச முடியரசுகள் உருவானதை பிரதிபலித்தன.  

அரசாங்கத்திற்கு அரசர் தலைமை தாங்கினார். அவருக்கு மையப்படுத்தப்பட்ட ஒரு நிர்வாகம் உதவியது. அரசர் இறையாண்மையுள்ள ஆட்சியாளராக இருந்தார்.

வேளாண் உபரி மீது வரி விதித்தார். அதை மறு விநியோகம் செய்தார் . படி நிலைகளைக் கொண்ட சமூகத்தில் அதிகாரத்தின் மூலமும் அடக்குமுறை மூலமும் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை  உறுதி செய்தார். 


16 மகாஜனபதங்கள்

புராண, பௌத்த, சமண மரபு சான்றுகளின்படி 16 மகாஜனபதங்கள் பற்றி அறிய முடிகிறது.

Indian History
மகா ஜனபதங்கள்
அவை,
1.காந்தாரம்
2.காம்போஜம்
3.அசகம்
4.வத்சம்
5.அவந்தி
6.சூரசேனம்
7.சேதி
8.மள்ளம்
9.குரு
10.பாஞ்சாலம்
11.மத்ஸ்யம்
12.வஜ்ஜி(விரஜ்ஜி)
13.அங்கம்
14.காசி
15.கோசலம்
16.மகதம்



கங்கை சமவெளியில் சிறு நாடுகள் ஜனபதங்கள் என்று அழைக்கப்பட்டன. குடியரசு அரசுகள், சிறு அரசுகள், தலைமை ஆட்சி பகுதிகள் என அனைத்தும் கலந்திருந்தன. 

மகாஜனபதங்கள் அவற்றின் அரசு அதிகாரத்தின் தன்மையை பொறுத்து கண சங்கங்கள் என்றும் குடி தலைமை ஆட்சி என்று பிரிக்கப்பட்டன.
 இனக்குழுக்களை மையமாகக் கொண்ட குழுவினரால் ஆளப்பட்ட கணசங்கங்களும் இருந்தன. இவற்றில் மிகவும் பிரபலமானது விரிஜ்ஜிகளின் கணசங்கமாகும். இது மிதிலை பகுதியில் இருந்தது. இதன் தலைநகரம் வைசாலி ஆகும். இந்த அரசுகள் தான் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அரசர்களின் கீழ் இருக்கவில்லை. இங்கு பல்வேறு இனக் குழுக்களின் தலைவர்களால் கூட்டாக முடிவுகள் எடுக்கப்பட்டன. 

கோசலம், காசி போன்ற சில அரசுகளும் இக்ஷ்வாகு, விருஷ்ணி போன்ற இனக்குழுக்களின் பெயர்களும் இந்த தொடக்க கால அரசர்களின் பெயர்களும் ராமாயணம்,  மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.


Bottom Post Ad

Ads Area