பகுதி-1 (சரத்து 1 முதல் 4 வரை) - மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

பகுதி 1 : மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் மற்றும் எல்லை.

சரத்து 1 :  இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிடப்படுகிறது. அரசியலமைப்பில் கூட்டாட்சி என்ற வார்த்தை இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக ஒன்றியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மாநிலங்கள் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


சரத்து 2 :   நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் புதிய மாநிலங்களை உருவாக்குதல்.  மேலும் சரத்து 2-இன்  கீழ் புதிதாக யூனியன் பிரதேசம் ஒன்றை ஏற்கவோ அமைக்கவோ முடியாது.

யூனியன் பிரதேசங்களை சேர்த்துக் கொள்ளுதலும் புதிதாக அமைக்கப்படுதலும்  ஒரு அரசமைப்பு சட்டத்திருத்தம் வாயிலாகத்தான் செயல்படுத்த முடியும். சரத்து 2 இரண்டு வகையான அதிகாரங்களை வழங்குகின்றது.

1. புதிய மாநிலங்களை ஒன்றியத்தில் ஏற்றுக்கொள்ளுதல்.
2. புதிய மாநிலங்களை அமைத்தல் என்பவை ஆகும்.

சரத்து 3 :  மாநிலங்களை உருவாக்கும் போது பெயர் மற்றும் பரப்பளவை மாற்றி அமைத்தல். இதற்கு அதிகாரம் படைத்தது பாராளுமன்றம் ஆகும்.

மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் முன்மொழிவு ஒரு மாநிலத்தின் அளவு எல்லை அல்லது பெயரை பாதிக்குமானால் அந்த சட்ட வரைவு, குடியரசுத் தலைவரால் பரிசீலிக்கப்படும்.  அந்த மாநில சட்டமன்றத்திற்கு அம்மாநிலம் தனது கருத்தை குறிப்பிட்ட கால அளவிற்குள் தெரிவிக்க வேண்டும். எனினும் அந்த மாநில சட்டமன்றம் வெளியிடும் கருத்து குடியரசு தலைவரையோ அல்லது நாடாளுமன்றத்தையோ கட்டுப்படுத்தாது.

இந்திய நாடாளுமன்றம் ஒரு சட்டம் வாயிலாக சாதாரண பெரும்பான்மையில் ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கலாம் அல்லது அப்போது இருக்கும் மாநிலத்தின் நில அளவு அல்லது எல்லைகள் அல்லது பெயரை மாற்றி அமைக்கலாம். இதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் தேவை இல்லை.  சரத்து 3-இன் கீழ் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இந்திய நிலப் பகுதியை அயல் நாட்டிற்கு கொடுக்க முடியாது.  

சரத்து 4 : புதிய மாநிலங்களை உருவாக்கலாம் அல்லது மாற்றி அமைக்கலாம் என்ற வழிமுறையை எடுத்துக் கூறுகிறது. 

மொழிவாரி மாநிலங்கள்

 1920-இல் நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  காந்தியும் இக்கருத்தை சுதந்திரம் அடையும் வரை வலியுறுத்தினார். 1948 ஜூன்-இல் ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. தார் தலைமையில் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பது பற்றி ஆராய குழு ஏற்படுத்தப்பட்டது.  1948 டிசம்பரில் எஸ்.கே. தார் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.  இந்த அறிக்கையை ஆராய JVP (ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா) கமிட்டி  1949 ஏப்ரலில் அமைக்கப்பட்டது. இக்குழு தார் குழுவின் அறிக்கையை பொருளாதாரத்தின் அடிப்படையில் நிராகரித்தது.

 1917-லிருந்தே தனி ஆந்திர மாகாணம் வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. 1953-இல் சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதியை உள்ளடக்கிய ஆந்திரா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 19-இல் உயிரிழந்தார்.  1952, டிசம்பர் 19-இல் இந்திய அரசு ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தது.  இதனால் 1953 அக்டோபர் 1-இல் தெலுங்கு பேசும் பகுதியை உள்ளடக்கிய ஆந்திரா இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

 1953 டிசம்பரில் பசல் அலி தலைமையில் ஹச்சன் குன்ஸ்ரூ, கே.எம்.பனிக்கர் மற்றும் ஹிருதயநாத் ஆகியோரை கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இக்குழு 1955 செப்டம்பரில் அறிக்கை சமர்ப்பித்தது. இக்குழு இந்தியாவை 16 மாநிலங்களாகவும், 3 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க  பரிந்துரைத்தது. இக்குழுவின் அடிப்படையில் 1956, ஆகஸ்ட் 31-இல்  மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. 7-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1956-இன்படி இந்தியா மொழிவாரியாக 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன்  பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

1960-இல் பம்பாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத் 15-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. 1961-இல் பத்தாவது சட்ட திருத்தத்தின்படி தாத்ரா நகர் ஹவேலி ஏழாவது யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. 1961-இல் 12 வது சட்டத்திருத்தப்படி கோவா, டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 1962-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


    1963-இல் 16 வது மாநிலமாக நாகலாந்து உருவாக்கப்பட்டது. 1962-இல் 14-வது சட்டத்திருத்தப்படி பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது.  ஷா கமிட்டியின் பரிந்துரைப்படி 1966-இல் பஞ்சாப் மூன்றாக பிரிக்கப்பட்டு ஹரியானா, சண்டிகர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 

25.01.1971-இல் இமாச்சலப் பிரதேஷ் 18 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது. 21.01.1972-இல் மணிப்பூர் 19-வது மாநிலமாகவும், திரிபுரா 20-வது மாநிலமாகவும், மேகாலயா 21-வது மாநிலமாகவும் உருவாக்கப்பட்டது. 1975-இல் 36 வது சட்டத்திருத்தப்படி 22 ஆவது மாநிலமாக சிக்கிம் உருவாக்கப்பட்டது. 53வது சட்டத்திருத்தம் 1987-இல் மிசோரம் 23 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது.

20.02.1987 அன்று 55-வது சட்டத்திருத்தம் மூலம் 24 -வது மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.  56 வது சட்டத்திருத்தப்படி 1987 - இல் கோவா 25-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.

01.01.2000 அன்று மத்தியபிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டு 26-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. உத்திரபிரதேசத்தில் இருந்து உத்ராஞ்சல் (அல்லது) உத்தரகாண்ட் பிரிக்கப்பட்ட 27 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது .

பீகாரிலிருந்து ஜார்கண்ட்  பிரிக்கப்பட்டு 28 வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.  2014 ஜூன் 2-இல் தெலுங்கானா ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 29 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது.  அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அக்டோபர் 31, 2019 அன்று பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக சேர்க்கப்பட்டன.  தற்போது இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.  ஆனால் , டாமன் டையு மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளும்  26, ஜனவரி 2020 இணைத்து அன்று இணைக்கப்பட்டது.  எனவே, தற்போது யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 8 ஆகும். 

பகுதி-1 (சரத்து 1 முதல் 4 வரை) - மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.