- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் - குறள் -71
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்
சொற்பொருள்:
ஆர்வலர்-முதிர்ந்த அன்புடையவர்; புன்-துன்பம்; கணீர்-கண்+நீர், கண்ணில் பெருகும் நீர்; பூசல்-ஆரவாரம்;
- அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு - குறள் -72
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்
சொற்பொருள்:
என்பும் - எலும்பும், உடம்பும்; உரியர்--உரிமையுடையார்; பிறர்க்கு-மற்றவர்க்கு.
- அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு - குறள் -73
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்
சொற்பொருள்:
இயைந்த-பொருந்திய; வழக்கு-நெறி, வழி, பழக்க முறை, பயன், முறைமை; என்ப-என்று சொல்லுவர்; ஆருயிர்க்கு-அருமையான உயிருக்கு; என்போடு-உடம்போடு, எலும்புடன் கூடிய உடலோடு;
- அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு- குறள் -74
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்
சொற்பொருள்:
ஈனும்-பயக்கும்; ஆர்வம்-விருப்பம்; அதுஈனும்-அது தரும்; நண்பு-தோழமை; நாடா-தேடா; சிறப்பு-உயர்ச்சி, பெருமை.
- அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு- குறள் -75
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்
சொற்பொருள்:
அன்புற்று-உள்ள நெகிழ்ச்சியுடன்; அமர்ந்த-பொருந்திய; வழக்கு-நெறியின் பயன்; என்ப-என்று சொல்லுவர்; வையகத்து - மண் உலகத்தில்; இன்புற்றார்-மகிழ்ச்சியடைந்தவர்; எய்தும்-அடையும்;
- அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை - குறள் -76
அறியாதவர்,அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
சொற்பொருள்:
அறத்திற்கே-நற்செயலுக்கே; சார்பு-சார்ந்து நிற்பது, துணை; என்ப-என்று சொல்லுவர்; அறியார்-அறியாதவர்; அறச்செயல் அல்லாததற்கும்; அஃதே-அதுவே;
- என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்- குறள் -77
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
சொற்பொருள்:
என்பு-எலும்பு; இலதனை-இல்லாததை; வெயில்-ஞாயிற்றின் வெப்பம்; போல-ஒத்திருப்ப; காயுமே-எரிக்குமே, கருக்கிவிடுமே; அன்பு-அன்பு, உள்ள நெகிழ்ச்சி; இலதனை-இல்லாததை; அறம்-அறம்.
- அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று- குறள் -78
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
சொற்பொருள்:
அகத்து-உள்ளே; இல்லா-இல்லாத; வன்-வலியதாகிய; பாற்கண்-நிலத்தில்; வற்றல்-உலர்ந்தாகிய; தளிர்த்து-கொழுந்துவிட்டு; அற்று-போலும்,
- புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு- குறள் -79
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
சொற்பொருள்:
புறத்துறுப்பு - வெளிஉறுப்பு; எவன்செய்யும்-என்ன செய்யும்?, என்னத்துக்கு?; யாக்கை-உடம்பு; அகத்துறுப்பு - உள் உறுப்பு; இலவர்க்கு-இல்லாதவர்க்கு
- அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு- குறள் -80
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்
சொற்பொருள்:
அன்பின் வழியது-அன்பை அடிப்படையாகக் கொண்டது; அஃதிலார்க்கு -அது இல்லாதவருக்கு (அதாவது அன்பு இல்லாதவர்களுக்கு); என்பு-எலும்பு; போர்த்த-சுற்றி மூடிய;