Ads Area

தமிழக வரலாறு மற்றும் பண்பாடு - வரையறையும் நிலைத்ததன்மையும்

 

பண்டைய தமிழர் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர்.அவர்கள் தனி மனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றிருந்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

    
பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை  பற்றி விவரிப்பதாகும். 

ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு.எனவே நமது பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.


செம்மையான வாழ்விற்கு அடித்தளமாக அமைவது பண்பாடு. இச்சொல் கலாச்சாரம் என வழங்கப்பெற்றது.   

கலாச்சாரம் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக பண்பாடு என்ற சொல்லை திரு டி. கே.சிதம்பரநாதனார் என்பவர்  தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.  



 பண்பாடு சொற்பொருள் விளக்கம் :



        பண்படு என்னும்  வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியதே பண்பாடு ஆகும்.  பண்பாடு என்பதற்கு சீர்படுத்துதல், செம்மைபடுத்துதல் என்பன பொருள்களாகும்.



பண்பாடு வரையறை :



பண்பாடு பற்றி சான்றோர்களும், வரலாற்று வல்லுநர்களும் கூறியுள்ள கருத்துக்கள் பண்பாட்டின் சிறப்பினை உணர்த்துவதாக உள்ளன.  



1. E.B.டெய்லர் : மனிதன் சமுதாயத்தில் அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள் , சட்டம்,  பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு ஆகும்.  



2. வால்டேர் : அவரவர் அன்றாட பணிகளை நேர்மையான மனநிலையுடனும் நேர்மையான நோக்குடனும் மகிழ்ச்சியுடனும் செய்வதில்தான் பண்பாடு மிளிர்கிறது .



3. கே. எம். முன்ஷி : பண்பாடு என்பது சீரிய வாழ்வு முறை, இவ்வாழ்வு முறை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளால் ஊக்குவிக்கப்படுகிறது. 



4. டாக்டர் சி.பி. ராமசாமி அய்யர் : வாழ்விற்குரிய வழக்கமான பணிகளை திறமையாக செய்வதை உபநிடதங்கள் வலியுறுத்துகின்றன.   உபநிடத கருத்துகளை பிரதிபலிப்பதே பண்பாடு  ஆகும். 



5.தமிழ் அறிஞர்களின்  கருத்து:  தமிழ் மொழியில் பண்பாடு என்பது சான்றாண்மையாகிய ஒழுக்கம் அல்லது உயர்ந்த வழி செல்லுதல் என்ற பொருளை தன்னுள் கொண்டு வாழ்வை சிறப்படையச் செய்வது என்று பொருள்படுகிறது. 

பண்பாட்டை சுருங்கக் கூறுமிடத்து ஒரு மனிதனிடம் காணப்படும் மூன்று கூறுகள் முறையே உடல், உள்ளம், ஆன்மா ஆகும்.  இவற்றுள் உடல் அழியக்கூடியது,  அழியாத தன்மை உடைய உயிரின் பிரதிபலிப்பே உள்ளம் . எனவே பண்பாடானது உயிரையும் உள்ளத்தையும் செம்மைப்படுத்தி அகவளர்ச்சியை மையமாகக் கொண்டதே ஆகும்.

உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்கிறது தொல்காப்பியம்.   இங்கு உயர்ந்தோர் என்பது பண்பாடு உடையவர்களை குறிக்கிறது.  நல்ல வழி முறைகளை பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.   இவ்வுலகம் பண்புடையவர்களால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பண்புடையார் பட்டுண்டு உலகம் என்கிறார் வள்ளுவர்.இதன்மூலம் மனிதனை மேம்படுத்துகின்ற அன்பு, ஈகை, புகழ், பெரியோரை துணைக்கொள்ளல், மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.


நிலைத்த தன்மை 


பண்பாடு நிலையான தன்மை கொண்டது. பண்பாட்டுக் கூறுகள் மாறாத, அழியாத தன்மையுடையன. மனிதன் அழிந்தாலும் அழியாத தன்மையுடைய பண்பாடு அவனைத் தொடர்ந்து வரும். என்பதையே வள்ளுவர் 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்ற குறள் மூலம் விளக்குகிறார். 

கல்வி என்பது நூலறிவை மட்டும் கொள்ளாமல் நன்னெறிகளை பின்பற்றுதலையும் வள்ளுவர் கல்வி என்றே கூறுகிறார். பண்பாடு தனிமனிதனின் முன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் உரிய குறிக்கோளை அடிப்படையாக கொண்டது.  நடைமுறை வாழ்விற்கு வேண்டிய இன்றியமையாத வாழ்வியல் நெறிகளை பண்பாடு கொண்டுள்ளது.  வாய்மையாகிய பொய் பேசாமை, அகிம்சையாகிய பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை, இரக்கமாகிய கருணை மனப்பான்மை என்று பல அன்றாட வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.


         பண்பாடு என்பது மாந்தனது அகவுணர்வு வளர்ச்சியையும், சீர்மையையும்  குறிப்பது  ஆகும்.  மாந்தன் தன் அறிவுத்திறத்தாலும், உள்ளுணர்வு திறத்தாலும்,  உள்ளத்தை பண்படுத்தி அன்புடையவனாகவும், அருள் உடையவனாகவும், ஈகையுடையவனாகவும், இரக்கமுடையவனாகவும், பண்புடையவனாகவும், பக்கமுடையவனாகவும், வீரமுடையவனாகவும், தீரமுடையவனாகவும், ஊக்கமுடையவனாகவும், உணர்வு உடையவனாகவும், மரியாதையுடையவனாகவும், பற்றுடையவனாகவும், பணிவுடையவனாகவும், தன்னலம் கருதாதவனாகவும், பிறர் நலம் பேணுபவனாகவும் இருக்க வேண்டும்.   

தமிழக வரலாறு மற்றும் பண்பாடு - வரையறையும் நிலைத்ததன்மையும் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.


Bottom Post Ad

Ads Area