ராமலிங்க சுவாமிகள்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள மருதூர் எனும் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் இராமையா மற்றும் சின்னம்மை ஆவார். இவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் கொண்டவர்.
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல் ஜீவகாருண்யம்,ஆகவே அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்கிறார் ராமலிங்க அடிகள் .
1856 இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று சொல்லும் இராமலிங்க அடிகள் 1866-இல் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தை கருத்தில் கொண்டு 1867-இல் சாதிகளை தாண்டி அனைவருக்கும் உணவளிக்க இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார். அதற்கு சத்திய தரும சாலை என்று பெயரிட்டார்.
இவர் இயற்றிய ஏராளமான பாடல்களின் தொகுப்பு திருவருட்பா எனப்படுகிறது. இந்த திருவருட்பாவில் ஆறு தொகுப்புகள் உள்ளன. இவருடைய தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை புண்படுத்தியதால் வள்ளலாரின் பாடல்களை மருட்பா என அவர்கள் கண்டனம் செய்தனர். மருட்பா என்றால் அறியாமையின் பாடல்கள் என்பதே பொருளாகும் .
1872 சத்திய ஞான சபையை நிறுவினார். சிறந்த சொற்பொழிவாளர், போதகாசிரியர், உரையாசிரியர் , சித்தமருத்துவர் , பசிப்பிணி போக்கிய அருளாளர், பதிப்பாசிரியர், நூலாசிரியர் ,இதழாசிரியர் ,இறையன்பர், ஞானாசிரியர் , அருளாசிரியர் உள்ளிட்ட பன்முக ஆற்றல்களைக் கொண்டவர் இராமலிங்க அடிகள்.
இவர் பதிப்பித்த நூல்கள் சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம் ஆகும்.
இவர் இயற்றிய உரைநடை நூல்கள் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகும்.
மக்கள் அறியாமை நீங்கி, அறிவு ஒளி பெற, வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசன புதுமையைப் புகுத்தினார் . இதனால்தான் பாரதியார் வள்ளலாரை 'புதுநெறி கண்ட புலவர்' என்று போற்றியுள்ளார்.
இராமலிங்க அடிகள் வடிவுடை 'மாணிக்க மாலை' என்னும் நூலையும் திருவொற்றியூர் சிவபெருமான் மீது 'எழுத்தறியும் பெருமான் மாலை' என்னும் நூலையும் பாடியுள்ளார் .
இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17 ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது