திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் திரி என்றால் மூன்று; கடுகம் என்றால் காரம் உள்ளது என்று பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.
நல்லாதனார்
திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார்.
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல்
வருகிறது.
இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும்
நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.
இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது.
மேலும் இந்நூலில் 66 பாடல்களில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக்கூறப்பட்டுள்ளது. 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக்கூறப்பட்டுள்ளது. 300 அறக்கருத்துக்கள்இந்நூலில்கூறப்பட்டுள்ளது.
திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.
பாடல் வரிகள்:
‘’முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு’’
ஒருவன், உயர்வும் ஊக்கமும்
பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஒட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றிக் கூறும் பாடல்
இது..
‘’பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு’’
பிறர் தன்னை உயர்த்தி பேசும்
பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல்
பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும்
என்னும் வாழ்வியல் உண்மையைச் சொல்லும் பாடல் இது..
‘’கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம்,
நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி’’
உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான
மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும்
நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.
ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்கது..