திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் திரி என்றால் மூன்று; கடுகம் என்றால் காரம் உள்ளது என்று பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.
நல்லாதனார்
திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார்.
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல்
வருகிறது.
இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும்
நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.
இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது.
மேலும் இந்நூலில் 66 பாடல்களில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக்கூறப்பட்டுள்ளது. 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக்கூறப்பட்டுள்ளது. 300 அறக்கருத்துக்கள்இந்நூலில்கூறப்பட்டுள்ளது.
திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.
சிறந்த மேற்கோள்
"நெஞ்சம் அடங்குதல் வீடாகும்"
"தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்"
"வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்"
"நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்"
"நட்பின் கொழுமுனை பொய் வழங்கின் இல்லாகும்"
"கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி"
நல்விருந் தோம்பலின் நட்டாளாம்
வைகலும்
இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.