இந்திய அரசியலமைப்பு :
கம்பெனி
ஆட்சி காலச் சட்டங்கள் (1773 - 1853)
1773 ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act):
கம்பெனி நிர்வாகத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கட்டுப்படுத்திய முதல் சட்டம்.
1784 பிட்டின் இந்தியா சட்டம் (Pitt's India Act):
1773-ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் நடைமுறை சிக்கல்களை நீக்க 1784-இல் இங்கிலாந்து பிரதமர் பிட் என்பவரால் பிட் இந்திய சட்டம் கொண்டுவரப்பட்டது.கம்பெனியில் வணிகம் மற்றும் அரசியல் விவகாரங்களை நிர்வகிக்க இச்சட்டம் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியது.
1833 பட்டயச் சட்டம் (Charter Act):
வங்காள கவர்னர் ஜெனரலை 'இந்தியாவின் கவர்னர் ஜெனரல்' என மாற்றியதுடன், கம்பெனியின்
வணிகச் செயல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.
பிரிட்டிஷ்
நேரடி ஆட்சி காலச் சட்டங்கள் (1858 - 1947)
1858 இந்திய அரசு சட்டம்:
இந்தியாவில் கம்பெனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து பிரிட்டிஷ் அரசி (Crown) நேரடி ஆட்சியைத் தொடங்கியது.
1919 இந்திய அரசு சட்டம்:
மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியதுடன், நேரடித் தேர்தல்களுக்கு வழிவகுத்தது.
1935 இந்திய அரசு சட்டம்:
மாகாண சுயாட்சியை வழங்கி, மத்தியில் ஒரு கூட்டாட்சியை உருவாக்க
முயன்றது. இதுவே சுதந்திர இந்திய அரசியலமைப்புக்கு பெரிதும் அடிப்படையாக இருந்தது.
1947 இந்திய விடுதலைச் சட்டம்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டு தனி
நாடுகள் உருவாக வழிவகுத்து பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த தன்னாட்சி கொண்ட குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழி நடத்துகின்ற நாடாக உள்ளது.
இந்த அரசியலமைப்பு அமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம் 1935 சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக மாறியது.
1976-இல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்திய அரசியலமைப்பு உருவான விதம் :
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தன. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா, படிப்படியாக உயர்வு கண்டது.
1934இல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-லும் 1939-லும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசியல் நிர்ணய சபை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச் 1942-இல் பரிந்துரைத்தது. இதன்படி 1946-இல் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதற்கான தேர்தல் ஜூலை 1946-இல் நடைபெற்றது . டிசம்பர் 1946-இல் அரசியல் நிர்ணய சபை கூடியது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்றியம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது.
ஜவகர்லால் நேரு, இராஜகோபாலாச்சாரி , ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் அம்பேத்கர் ,மௌலான அபுல் கலாம் ஆசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஸ் மற்றும் பால் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாக முகர்ஜி என்ற புகழ்பெற்ற கிறிஸ்துவர் இருந்தார்.
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், அம்பேத்கர், நரசிம்மராவ் மற்றும் கே.எம்.முன்ஷி போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர் . சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்தியாவின் உண்மையான அரசியல் அமைப்பு பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவர் கையால் எழுதப்பட்டு பியூகார் ராம்மனோகர் சிம்ஹா மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு ஆங்கில பதிப்பை தவிர ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழி பெயர்ப்பினையும் கொண்டுள்ளது.
1946-ஆம் ஆண்டு அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையில் 292 மாகாண பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், கட்சி சார்பில் ஒருவர் மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர் .
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் நாள் நடைபெற்றது. சபையின் தற்காலிகத் தலைவராக டாக்டர்.சச்சிதானந்த சின்ஹா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்திய அரசை உருவாக்க கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்ததை தொடர்ந்து டாக்டர்.ராஜேந்திர பிரசாத் இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், எச்.டி..முகர்ஜி மற்றும் வீ.டி..கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசியலமைப்பை உருவாக்க 23 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் முக்கியமான குழு வரைவுக்குழு ஆகும்.
29.08.1947 அன்று அரசியலமைப்பை எழுதும் பணிக்காக இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
இந்திய அரசமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆனது. ஒரு திட்டமிட்ட கூட்டங்களில் அரசமைப்பு சட்டத்தை பற்றி கலந்துரையாட 114 நாட்கள் ஆயிற்று.
தேசிய கீதமும், பாடலும் அங்கீகரிக்கப்பட்ட நாள் ஜனவரி 24, 1950 ஆகும். அரசியல் நிர்ணய சபையில் 11 கூட்டங்கள் நடந்தது. இறுதியாக நடைபெற்ற கூட்டம் 24.1.1950 ஆகும். இக்கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டது. அவற்றுள் சில ஏற்கப்பட்டன, சில நிராகரிக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டபோது 22 பாகங்களையும் 8 அட்டவணைகளையும் 395 சரத்துக்களையும் கொண்டிருந்தது. தற்போது 25 பாகங்களையும் 12 அட்டவணைகள் 449 சரத்துக்களையும் கொண்டுள்ளது. 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1929-ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு தீர்மானத்தின்படி பூரண சுயராஜ்யம் 1930-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் கொண்டாடப்பட்டது அதனை நினைவு கூறும் வகையில் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்:
உலகிலுள்ள எழுதப்பட்ட அனைத்து அரசியல் அமைப்புகளை விடவும் இந்திய அரசியலமைப்பு மிக நீளமானது. இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளில் இருந்து பெறப்பட்டவை.
இது நெகிழா தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. கூட்டாட்சி முறை அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது மத்திய மாநில அரசுகளை ஒருங்கிணைக்கிறது. மத்தியில் மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் நாடாளுமன்ற முறையை தோற்றுவிக்கிறது.
சுதந்திரமான நீதித் துறையை வழங்குகிறது, உலகளாவிய வயதுவந்தோர் வாக்குரிமை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது. ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
மேலும், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு விதிகள் மூலம் சலுகைகள் வழங்க வழி செய்கிறது.
ஒற்றை ஆட்சி முறை கொண்ட ஒரு கூட்டாட்சி அல்லது கூட்டாட்சி என்ற சொல் அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று விவரிக்கிறது.
அடிப்படை உரிமைகள், மக்களுக்கு அடிப்படை மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் உத்திரவாதம் அளிக்கிறது.
1976-ஆம் ஆண்டில் 42-வது சட்டத்திருத்தம் வாயிலாக 4a என்பது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது. இதில் 10 கடமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் மக்களது நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசு தனது சமூக பொருளாதாரக் கொள்கையை வடிவமைக்கும் போது அரசியலமைப்பு வழிகாட்டியாக செயல்படுகிறது. சுதந்திரமான நீதித்துறை என்பது நீதித்துறை மேலாய்வு கொண்ட சுதந்திரமான நீதித்துறை அமைப்பு ஆகும்.
இந்திய அரசியலமைப்பு உருவான விதமும் சிறப்பு அம்சங்களும் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
